நெடுங்காடு ஜவஹர்லால் நேரு அரசு மேநிலைப் பள்ளியின் மாணவர்கள் நாங்கள். நான் பிறந்த மேலக்காசாக்குடியில் 5-ஆம் வகுப்பு வரைதான் இருந்தது. தமிழ் மிஸ்சே" ராமசாமி, பூனைக்கண் வாத்தியார் சண்முகம், "கருப்பு"வாத்தியார் ரத்தினம் போன்ற "மினியேச்சர் மிலிட்டரி" டீமிடம் ஐந்தாம் வகுப்பு வரை ஓடியது. அதன்பின் உயர்நிலைக்கு கல்விக்கு 6 கிமீ தொலைவுக்கு நடந்து சென்று நெடுங்காடு ஜவஹர்லால் நேரு அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்தோம்.
பல்வேறு வகுப்புகளில் எங்களை செதுக்கிய ஓமலிங்கம், குமாரசாமி, சவுரிராஜன், யூஜியன், முருகேசன்(PET), ராமகிருஷ்ணன், கல்யாணசுந்தரம், RN .ஸ்ரீனிவாசன், சவுந்தரராஜன்(NS), பாலசுப்பிரமணியன்(PKB), திருவிளையாட்டம் பன்னீர்செல்வம், ஒய்.பன்னீர்செல்வம், ராமானுஜம், (சூசை வாத்தியார்) கட்சி வேந்தர், மல்லிகா மற்றும் கமலா டீச்சர்கள் எங்களால் மறக்க முடியாதவர்கள்.
பத்தாம் வகுப்பு வந்தபோது, எங்களுக்கு பெரும் சோதனை காத்திருந்தது. பொதுத் தேர்வை 5 கி.மீ.க்கு அப்பாலிருக்கிற திருநள்ளாரையடுத்த தேனூர் அரசு மேநிலைப் பள்ளியில் எழுதியாக வேண்டும் என்றார்கள். "இங்குதானே படித்ததோம்? இந்தப் பள்ளியிலேயே தேர்வெழுத வேண்டும்? இங்கேயே தேர்வு மையம் வேண்டும்" என்றோம்.
"பொடிப் பசங்கதானே!" என்று தலைமையாசிரியர் பொருட்படுத்தவில்லை. கல்வித்துறை அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. வேறு வழியின்றி மாணவர்களை ஒன்று திரட்டி ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டேன். போலீசார் வந்தனர். பள்ளியின் கேட்டை சார்த்தினோம். நாங்கள் அசைந்து கொடுக்கவில்லை.
திட்டமிட்டபடி எங்கள் கோரிக்கையை காகிதங்களில் எழுதி, காரைக்காலிலிருந்து புதுச்சேரிக்கு செல்லும் பெரியார், AVMS, JVS, MOH, பேருந்துகளில் பேருந்துகளில் ஒட்டி அனுப்பினோம். தாரைக் காய்ச்சி, பேருந்தின் பின்புறம் எழுதினோம். நாங்கள் கோரியபடி தேர்வு மையம் நெடுங்காட்டில் அமைந்தது.
பள்ளி இறுதி நாளன்று எங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆசிரியர்களை அழைத்தோம். பள்ளி முதல்வரின் உத்தரவுப்படி ஆசிரியர்கள் வர மறுத்தனர். நாங்கள் போய் பள்ளி முதல்வரின் அறையில் இருந்த ஜவஹர்லால் நேருவின் புகைப்படத்தை இறக்கினோம்.
அந்தப் படத்தை பள்ளியின் முகப்பில் நாற்காலியில் வைத்து, அதனுடன் நின்றும், அமர்ந்தும் புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.
படத்தில் நேரு ஒருவர் மட்டுமே சிரித்தார். எங்களது முகங்களில் வேதனை! காலம் உருண்டோடிவிட்டது.
இருந்தபோதும், என்னோடு படித்த நண்பர்கள் ஒருவரும் வீணாகி விடவில்லை. பல்வேறு அரசுப்பணிகள், தொழில் ஸ்தாபனங்களில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கின்றனர். எங்களுக்கு போதித்த ஆசிரியர்களை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நாங்கள் சந்திக்காத தவறவில்லை. சந்திக்க முடியாதவர்களை எங்களின் ஒவ்வொரு உயர்விலும் நன்றி மறவாமல் "குலசாமிகளாய்" கைகூப்பி நினைத்துக் கொள்கிறோம்.
வேலைக்காக நாங்கள் பள்ளி, கல்லூரியில் பயின்ற பாடங்கள் இப்போது முழுமையாக நினைவிருக்கப் போவதில்லை. மனிதர்களிடமிருந்து தினம் தினம் சந்திக்கிற மதிப்பு மிக்க அனுபவங்கள் நாங்கள் யார்? என்பதையும், நம்மிடம் பழகுபவர்கள் யார் என்பதையும் புடம் போடும் உலை அடுப்பாக எரிந்தபடி இருக்கின்றன.
தம்பி மாரிமுத்து