புதுச்சேரி மாநிலத்தின் ''சூப்பர் காப்'' யார் என்று கேட்டால் போதும். சாதாரண ரோட்டோர வியாபாரி முதல், கோடிக்கணக்கில் வணிக நிறுவனம் நடத்தும் முதலாளி வரை உச்சரிக்கும் ஒரே பெயர் "சத்யா" ஆம், மாநில காவல்துறையின் டிஐஜி சத்திய சுந்தரத்தை பொதுமக்கள் "சத்யா" என்று அன்போடு அழைக்கின்றனர்.
புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த தமிழக வெற்றிக்கு கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அனுமதி கேட்டபோது டிஐஜி சத்திய சுந்தரம் முற்றிலும் மறுத்தார். கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மூலமாக செல்போனில் நடிகை விஜய் பேசியும் சத்திய சுந்தரம் தனது முடிவில் உறுதியாக இருந்தார்.புதுச்சேரியில் உங்கள் ரோடு ஷோவால், “ஒரு உயிர் போனாலும் நான் தான் பதில் சொல்ல வேண்டும்” என்று அனுமதி மறுத்தார்.
பிறகு ஏகப்பட்ட நிபந்தனைகளுடன் புதுச்சேரியில் போக்குவரத்து தளர்வாக இருக்கும் உப்பளம் தொகுதியில் பொதுக் கூட்ட அனுமதியை டிஐஜி சத்திய சுந்தரம் தந்தார். குழந்தைகள், கர்ப்பிணிகள், நோயுற்றவர்களுக்கு கூட்ட அரங்கில் அனுமதியில்லை.
வாகனங்களை குறிப்பிட்ட இடங்களில்தான் நிறுத்த வேண்டும். 5000 பேருக்கு மட்டுமே அனுமதி, அதுவும் குறிப்பிட்ட நேரத்துக்குள் அனைவரும் மைதானத்துக்கு வந்து விட வேண்டும். QR குறியீடுள்ள டோக்கனுடன் வரும் ஒரு நபருக்கே அனுமதி. இப்படி டிஐஜி சத்தியசுந்தரம் விதித்த நிபந்தனையை தவெகவினர் விழி பிதுங்கினர்.
புதுச்சேரி மக்களின் இயல்பு வாழ்க்கை கெடாமல், நடிகர் விஜய் கலந்து கொண்ட தவெக பொதுக் கூட்டத்தை சிறு அசம்பாவிதங்களின்றி குறிப்பிட்ட நேரத்துக்குள் சுபம் போட்டு, வழியனுப்பிய டிஐஜி சத்தியசுந்தரம் இப்போது புதுச்சேரியின் 'டாக் ஆப் த டவுனாக' இருக்கிறார்.
தமிழகத்தில் பிறந்து, அண்டை மாநிலமான புதுச்சேரியில் "சூப்பர் காப்" என்று கொண்டாடப்படுகிற டிஐஜி சத்தியசுந்தரம் உயிர் வேராக இருக்கும் ஊரை மறக்காத பண்பாளர் என்று பட்டுக் கோட்டைவாசிகள் அவரை கொண்டாடி மகிழ்கின்றனர்.
புதுச்சேரியில் சாமான்ய மக்களின் மன மொழியாக பிரகாசிக்கும் டிஐஜி சத்தியசுந்தரம், அண்மையில் இலங்கையிலிருந்து படகு மூலம் இந்தியாவுக்கு கஞ்சாம் ஓட்டையுடன் கரையேறிய கும்பலை, நட்ட நடுக் கடலிலேயே சுருட்டிக் கரையேற்றிய கெட்டிக்காரர்.
எளிய மனிதர்களின் அங்கமாய், வலிய அரசியலுக்கு சிக்காத காக்கிசட்டை சிங்கமாய், புதுச்சேரியின் டிஐஜியாக பிரகாசிக்கும் சத்தியசுந்தரம் குறித்து சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளன.
பட்டுகோட்டைக்காரரான டிஐஜி சத்தியசுந்தரம், தேசிய விருது பெற்ற ''நந்தன்'' மற்றும் கத்துக்குட்டி போன்ற வெற்றி படங்களை இயக்கிய இரா.சரவணனின் பள்ளித் தோழர். சரவணன் ஆனந்த விகடனில் வெற்றிகரமான பத்திரியாளராகப் பணியாற்றி, இயக்குநராகி தேசிய விருதை பெற்றவர்.
பட்டுகோட்டைவாசிகளால் ''சத்யா'' என்று பிரியத்துடன் அழைக்கப்படும் டிஐஜி சத்தியசுந்தரம் புதுச்சேரியில் கஞ்சா, ரவுடியிசம், ஆன்லைன் மோசடிக்கு வலுவான இரும்புத் திரையாகவே நீடிப்பதால், மாநிலம் முழுவதும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். தேவையின்றி வார்த்தைகளை பிரயோகிக்காமல், தனது செயல் மூலம் ஜனங்களைக் கவர்ந்த "சூப்பர் காப்" சத்யாவுக்கு பலதரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன