புதுச்சேரி
ரெஸ்டோபாரில் கொலை
பரபரப்பு பின்னணி!
புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான அரசு ரெஸ்டோபர் அனுமதியில் குழைவான கொள்கையை பின்பற்றியதன் விளைவு கல்லூரி மாணவனின் கொலையில் முடிந்திருக்கிறது.
புதுச்சேரியில் சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில் தங்கும் அறைகள் கொண்ட விடுதிகளில் ரெஸ்டோபருக்கு அரசு அனுமதி அளித்து வருகிறது. ரெஸ்டோபர் அனுமதியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசானது கடுமையான விதிகளை பின்பற்றி வருகிறது.
இருந்தும் கலால், போலீஸ் அதிகாரிகளின் துணையோடு நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்கு மேல், ரெஸ்டோபர்கள் இயங்குகின்றன. காரைக்காலில் நிரவியில் இயங்கிய ரெஸ்டோபரில் கஞ்சா பேக்கிங் செய்தும், உபயோகித்தும் வந்த வியாபாரிகளை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியில் சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில் ரெஸ்டோ பார்களில் டிஜே கவர்ச்சி நடனங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த ஈர்ப்பில் சென்னை உள்ளிட்ட தமிழகப் பகுதியிலிருந்து நிறைய ஆண்களும், பெண்களும் ஜோடி ஜோடியாக ரெஸ்டோபருக்குள் நுழைகின்றனர். நேரம் செல்லச் செல்ல பொதி தலைக்கேறி, எல்லை மீறுகின்றனர். இதுவாக்குவாதம், தள்ளு முள்ளு, கைகலப்பு என நீள்கிறது.
இதைக்கட்டுப்படுத்த போலீசாருக்கு போதிய அதிகாரத்தை அரசியல் அதிகாரம் பெற்றவர்கள் வழங்கவில்லை என்ற புகார்களும் எழுந்து வந்த நிலையில், புதுச்சேரி மிஷன் வீதி ரெஸ்டோபர் ஒன்றில் கல்லூரி மாணவன் பார் ஊழியர்களால் துடிக்கத் துடிக்க கத்திக் குத்துப்பட்டு உயிரிழந்துள்ளார்.
கடந்த 9-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு, ரெஸ்டோ பார் ஊழியர்களால் சென்னை கல்லூரி மாணவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அவரது நண்பரும் கத்திக் குத்துப்பட்டு, கவலைக்கிடமான நிலையில் புதுச்சேரி ஜி.எச்சில் சேர்க்கப்பட்டார்.
இந்தக்கொடூர படுகொலை சம்பவத்தில் உயிரிழந்த மாணவரின் நண்பரும் கத்திக் குத்தால், இரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடி வருவதாகவும் தகவல்கள் வெளியாயின. சம்பவம் தொடர்பாக ரெஸ்டோ பார் உரிமையாளர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை நிகர்நிலைப் பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட தனியார் கல்லூரியில் எம்பிஏ இரண்டாமாண்டு படிக்கும் மதுரையைச் சேர்ந்த ஷாஜன்(23) என்பவர் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக மற்ற கல்லூரிகளில் படிக்கிற தனது நண்பர்கள் 15 பேருடன் புதுச்சேரிக்கு வந்துள்ளார்.
இவர்களுடன் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற சார் பதிவாளர் சுந்தரபாண்டியன்-தவமணி தம்பதியரின் மகன் மோஷிக் சண்முகப் பிரியநும் புதுச்சேரி வந்தார்.
புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள தனியார் ரெஸ்டோபரில், நள்ளிரவு 12 மணியைக் கடந்த நிலையில் ஷாஜனுடன் வந்திருந்த நண்பர்களிடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. ரெஸ்டோ பாரில் இருந்த மற்ற வாடிக்கையாளர்கள், அவர்களை வெளியே அனுப்ப முறையிட்டனர். இதனால் பவுன்சர்கள், பார் ஊழியர்கள் அவர்களை பாரில் இருந்து வெளியேற்றி உள்ளனர்.
ரெஸ்டோபரிலிருந்து வெளியேற்றுவதை ஆட்சேபித்த மாணவர்கள் தகராறில் ஈடுபட, இரு தரப்பு கைகலப்பாக முற்றியது. இதில் ஆத்திரம் அடைந்த புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த பார் ஊழியரான அசோக்ராஜ், சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து மோஷிக் சண்முகபிரியனை முதுகில் குத்தியுள்ளார்.
இதை தட்டிக்கேட்ட ஷாஜனையும் இடுப்பில் குத்தியுள்ளார். இதில் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தனர். தகவல் தெரிந்ததும் பெரியகடை போலீசார் ரத்த வெள்ளத்தில் மோஷிக் ஷண்முகப்பிரியனை ஜி.எச்சுக்கு அனுப்பி வைத்தனர். இதில் மோஷிக் சண்முகபிரியன் வழியிலேயே இறந்தார். அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
கத்திக்குத்தில் உயிருக்கு போராடிய நிலையில், ஷாஜனுக்கு அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்களில் தகவல் வெளியானது.
சம்பவம் நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். பின்னர், சட்டம் ஒழுங்கு டிஐஜி சத்தியசுந்தரம், சீனியர் எஸ்பி கலைவாணன், கிழக்கு எஸ்பி இஷா சிங் ஆகியோர் கொலை நடந்த இடம், ரெஸ்டோ பாரை பார்வையிட்டனர்.
மேலும், பாரில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். கொலை தொடர்பாக அசோக்ராஜ், ரெஸ்டோ பார் உரிமையாளர் ராஜ்குமார், ஊழியர் டேவிட் உள்ளிட்ட 6 பேரை பெரியகடை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் கிளை சம்பவமாக இன்னொன்றையும் சிலர் குறிப்பிடுகின்றனர். ஷாஜனின் நண்பர் ஒருவர் ரெஸ்டோ பார் உள்ளே செல்ல முயன்றபோது, அரசியல் புள்ளி ஒருவரின் வாரிசான இளம்பெண்ணை இடித்ததாக கூறப்படுகிறது.
இதனால், கோபமடைந்த பெண், அந்த நபரை தகாத வார்த்தையால் திட்டியதாகவும், உடனே அப்பெண்ணை தட்டிக்கேட்ட போது, பாரில் இருந்த பவுன்சர், "நீங்கள் யாரும் புதுச்சேரியை தாண்ட முடியாது" என மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து, இருதரப்புக்கு இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு நிகழ்ந்துள்ளது.
தொடர்ந்து, ரெஸ்டோ பார் உள்ள சென்ற கல்லூரி மாணவர்களை, பவுன்சர்கள் சரமாரியாக தாக்கியதாகவும், பதிலுக்கு கல்லூரி மாணவர்கள் ரெஸ்டோ பாரை அடித்து உடைத்ததாகவும் தொடர் நிகழ்வாக கத்திக்குத்து சம்பவம் நிகழ்ந்ததாகவும் இன்னொரு தகவல் வெளியாகியுள்ளது.
கத்திக்குத்தில் பலத்த காயமடைந்த மோஷிக் சண்முக பிரியனை நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக, புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டு செல்ல காரை எடுத்துள்ளனர். அப்போது, அங்கு வந்த பெரியகடை போலீசார், காரின் சாவியைப் பிடுங்கியதாக கூறப்படுகிறது.
படுகாயமடைந்த மாணவனை மருத்துவமனைக்கு உடனே அழைத்து செல்ல வேண்டும் என்று நண்பர்கள் கெஞ்சியும் மசியாத போலீசார், கார் சாவியைத் தராமல்30 நிமிடங்கள் அலைக்கழித்துள்ளனர். அப்போது போலீசார் வந்ததை அறியாமல், மாணவர் ஷாஜன், பார் ஊழியர் அசோக்ராஜை தட்டிக் கேட்டுள்ளார்.
போலீசார் கண் முன்பாகவே, ஷாஜனை அசோக்ராஜ் கத்தியால் 2 முறை குத்தியுள்ளார். இதில் காயமடைந்த ஷாஜனை போலீசார் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், 30 நிமிடங்கள் வரை காருக்குள் இரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய மாணவன் மோஷிக் ஜிஏச்சுக்கு அனுப்பப்பட்டார். எனினும், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கத்திக்குத்துப்பட்ட மோஷிக்கை, ஜிஎச்சில் சேர்க்க முடியாதபடி கார் சாவியைப் பிடுங்கி போலீசார் ஏற்படுத்திய 30 நிமிட தாமதத்தால், மோஷிக் உயிரிழந்ததாக, அவரது நண்பர்கள் ஓலமிட்டுக் கதறியுள்ளனர். இதுகுறித்தும் விசாரணை மேற்கொள்ள சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கத்திகுத்து சம்பவத்தை அறிந்ததும் மிஷன் வீதி ரெஸ்டோபருக்கு சென்று விட்டோம். கூட்டநெரிசலில் யார், யாரை கத்தியால் குத்தியது என்பது உடனே தெரியாததால், யாரும் தப்பி விடாமலிருக்க நடவடிக்கை மேற்கொண்டோம். இருந்தும் இருவரையும் ஜிஏச்சுக்கு உடனடியாக அனுப்பினோம். துரதிஷ்ட வசமாக இருவர் இறந்துள்ளார். எங்கள் கடமையை விரைந்து செய்திருக்கிறோம்.
சிலரை கைதும் செய்துள்ளோம். உடன் நடவடிக்கை எடுத்த எங்களை பாராட்ட வேண்டும் என நினைக்கவில்லை. எங்கள் மீது பொத்தம் பொதுவில் குற்றம் சாட்டினால் என்ன சொல்வது?" என்கின்றனர் பெரியக்கடை போலீசார்.