புதுச்சேரியில் போலி மருந்து மோசடி விவகாரத்தில் முதன்மை குற்றவாளி ராஜா, மத்திய அமைச்சர்களுடன் இணைந்து நிற்கும் புகைப்படம் புதுச்சேரி ஆளும் அரசியலில் அனலை கிளப்பி உள்ளது.
அதே நேரம் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீது போலி மருந்து விவகாரத்தில் போர்க்கொடி எழுப்பி வரும் இந்தியா கூட்டணிக்கு இந்த புகைப்படங்கள் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளன.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திப்பதற்கு போலி மருந்து மோசடியின் முதன்மைக் குற்றவாளி குற்றவாளி ராஜாவை புதுச்சேரி சபாநாயகர் ஏம்பலம் செல்வம் டெல்லிக்கு அழைத்துச் சென்றதாக ஆரம்பத்தில் விமர்சனங்கள் எழுந்தன.
போலி மருந்து மோசடி மாபியா ராஜாவுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மத்திய அமைச்சர்களிடம் வங்கி கடன் சிபாரிசு செய்ததாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டன.
இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய நீதி மற்றும் சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலுடன் இணைந்திருக்கும் புகைப்படங்கள் புதுச்சேரி மாநிலம் முழுவதும் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்திருக்கின்றன.
மத்திய அமைச்சர்களுடன் போலி மருந்து மாஃபியா ராஜா, புதுச்சேரி சபாநாயகர் ஏம்பலம் செல்வம், ஜெயக்குமார் ரெட்டியார் இணைந்திருக்கும் புகைப்படங்கள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றன.
இதுகுறித்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கருத்து ஏதும் வெளியிடாத நிலையில், இந்தியா கூட்டணியில் இருக்கக்கூடிய காங்கிரஸ், திமுக ஊடக பிரிவினர் இப்புகைப்படங்களை சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்து வருகின்றனர்.
இவ்விவகாரம் புதுச்சேரியின் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மீதான நம்பகத்தை வெகுவாகக் குலைத்திருக்கிறது. இந்த புகைப்பட விவகாரம் குறித்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தரப்பில் இருந்து இதுவரை விளக்கம் ஏதும் வெளியாகவில்லை.
சபாநாயகர் ஏம்பலம் செல்வத்தின் தரப்பிலிருந்து விளக்கம் வரும் வரை புதுச்சேரி அரசியலில் சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் கண்டனங்களுக்கும் முடிவு இருக்காது.
LINKE: https://youtu.be/YEzLGpd1bUU