புதுச்சேரி மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கும் லேப்டாப் சாதனங்கள் கொள்முதலில் விஞ்ஞான போர்வை ஊழல் நடந்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் அதிகாரிகள், பொதுமக்கள் நடுவே எழுந்துள்ளது. இதுகுறித்து துணை நிலை ஆளுநர் கைலாசநாதன் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.
புதுச்சேரி மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு கல்வித்துறை மூலம் ஆண்டுதோறும் லேப்டாப் கம்ப்யூட்டர் சாதனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
மாணவர்கள் தரமான கல்வி பெறுவதற்கு இத்திட்டம் உதவுவதாக பெற்றோர் நடுவே வரவேற்பு எழுந்தது. அதே சமயம், இந்த லேப்டாப் கம்பியூட்டர் சாதனம் கொள்முதல் செய்ததில் அதிகாரிகள் முறைகேடு செய்திருக்கலாம் என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கடந்த வருடம் பள்ளி மாணவர்களுக்காக வழங்கப்பட்ட லேப்டாப் கம்பியூட்டர் சாதனம் தலா ஒன்று ரூ.28 ஆயிரத்துக்கு வாங்கப்பட்டது.
இதற்கான விலை கூடுதல் என்றும், கூடுதல் தொகைக்கு ஈடாக, லேப்டாப் சாதனத்தில் கூடுதல் அம்சங்கள் இருக்க வேண்டும் என அன்றைய கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு உயரதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.
லேப்டாப் சாதனங்களில் கூடுதல் வசதிகள் உறுதி செய்யப்பட்டபின் இயக்குனர் ருத்ரகவுடு குறிப்பிட்ட அந்த டெண்டருக்கு ஒப்புதல் அளித்தார். இந்த லேப்டாப் சாதனங்கள் இயக்குனர் ருத்ரகவுடுக்கு அடுத்து இயக்குனராக வந்த பிரியதர்ஷினி மூலம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
கடந்த முறை கூடுதல் வசதிகளுடன் ரூ.28 ,000 க்கு கொள்முதல் செய்யப்பட்ட இந்த லேப்டாப் சாதனங்கள் இந்த வருடம் ரூ.38 ,000 -க்கு கொள்முதல் செய்யப்பட்டிருக்கின்றன. அதாவது ஒரே வருடத்தில் லேப்டாப் சாதனங்கள் அதிரடியாக ரூ.10 ,000 கூடுதல் தொகைக்கு வாங்கப்பட்டிருக்கின்றன.
புதுச்சேரி கல்வித்துறைக்கு உரிய இயக்குனர் இல்லாததால், பொறுப்பு இயக்குனராக இருந்த இணைக் கல்வி இயக்குனர் சிவகாமி மூலம் லேப்டாப் சாதனங்கள் ஒவ்வொன்றும் ரூபாய் 10 ஆயிரம் கூடுதல் தொகைக்கு கொள்முதல் செய்ய ஒப்புதல் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.
பதவி ஆசையும், பயந்த சுபாவமும் கொண்ட சிவகாமி இந்த கூடுதல் தொகை டெண்டருக்கு நிர்பந்திக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் புதுச்சேரி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் இதற்கு ஒப்புதல் அளிக்கும் முன்பாக துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், இந்த விலை வித்தியாசம் குறித்து ஆய்வை கொண்டாரா என்பது தெரியவில்லை.
எனினும், இப்போதாவது இந்த கூடுதல் கொள்முதல் குறித்து துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் ஆய்வு மேற்கொள்ள முடியும் என அரசு அதிகாரிகள் மட்டத்தில் பரபரப்பு நிலவுகிறது.