காரைக்காலில் முன் விரோதம் காரணமாக வீடு எரிக்கப்பட்ட சம்பவத்தில் அடுத்தடுத்து 4 வீடுகள் எரிந்து நாசமானதில் இரண்டு ஆட்டுக்குட்டிகள் உட்பட ரூ.1,50,000 ரொக்கம், நகைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின.
காரைக்கால் இந்திரா நகரைச் சேர்ந்தவர் கம்பி பீட்டர் கண்ணன்(45), இவரது வீட்டுக்கு அருகில் ஜோடாப் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 வருடங்களாக கண்ணனுக்கும், ஜோசப்புக்கும் இடம் சம்பந்தமாக முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
அடிக்கடி கண்ணனின் குடும்பத்தாரிடம் ஜோசப் குடிபோதையில் தகராறு செய்தும், வீட்டைக் கொளுத்திவிடுவேன் என்று அடிக்கடி மிரட்டியும் வந்துள்ளார். நேற்று முன்தினம் கண்ணன் கட்டட வேலைக்காக காரைக்கால்மேடு சென்றுள்ளார்.
கடந்த 27-அன்று கண்ணனின் வீட்டு வாசலில் ஜோசப் நின்றுகொண்டு "வீட்டைக் கொளுத்தி விடுவேன்" தகராறு செய்தார். இதை கண்ணனிடம் அவரது மனைவி போனில் தெரிவித்தார். அப்போது "ஜோசப் அப்படித்தான் கூச்சலிடுவான். விட்டுவிடு" என்று கூறியுள்ளார். சற்று நேரத்தில் பாட்டிலில் பெட்ரோலை எடுத்து வந்து கண்ணனின் வீட்டு மேற்குப்பக்கம் ஊற்றி, தீப்பெட்டியால் கொளுத்திவிட்டு ஜோசப் ஓடினர். அக்கம் பக்கம் இருந்தவர்கள் பிடிப்பதற்குள் தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
மாலை 4.30-க்கு கண்ணனுக்கு அவரது மனைவி காயத்திரி போன் செய்துள்ளார். ஜோசப் வீட்டைக் கொளுத்தி விட்டதாகவும், வீடு பற்றி எரிவதாகவும் தெரிவித்தார். வேலை செய்யும் இடத்திலிருந்து கண்ணன் விரைந்து வந்தபோது கண்ணனின் வீடு மட்டுமன்றி அவரது வீட்டுக்கு பக்கத்தில் இருந்த பாலாஜி என்பவரின் தண்ணீர் டேங்க், கூரை மற்றும் ஏசி எரிந்து கொண்டிருந்தது.
அடுத்தடுத்து தவமணி என்பவரின் வீடும், வீட்டுக்கு மேலிருந்த கார்த்தி என்பவரின் குடியிருப்பும் எரிந்தது. தகவலறிந்து தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்தனர். எரிந்து கொண்டிருந்த வீடுகளின் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்தனர். இந்தத்தீயில் கார்த்தியின் குடியிருப்பிலிருந்த டி.வி. மரக்கட்டில் முற்றிலும் எரிந்து நாசமானது.
கண்ணனின் வீடு நாலா புறமும் எரிந்ததால், வீட்டுக்குள் சென்று எந்தப் பொருளையும் எடுக்க முடியவில்லை. இதனால், வீட்டுக்குள் இருந்த டிவி,பிரிட்ஜ்,வாஷிங் மெஷின், கிரைண்டர், மிக்சி, ரூ.1,50,000 ரொக்கம், இரண்டரை பவுன் தோடு, கண்ணனின் தாய் வாசுகி பெயரிலிருந்த வீட்டு மனை பத்திரம், மேலும் இரு மனைகளின் பத்திரங்கள் உருத்தெரியாமல் எரிந்து போயின.
மேலும், வங்கி சேமிப்புப் பத்திரங்கள், சமையல் எரிவாயு புத்தகம், நகை அடகு சீட்டுக்கள், கட்டில், பீரோ மற்றும் துணிமணிகள், தட்டுமுட்டு சாமான்களும் முற்றிலும் எரிந்து சாம்பலாயின. வீட்டுக்குள் நின்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளை தீயில் எரிந்து இறந்து கிடந்தன.
இதுகுறித்து கண்ணன் காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்தபோலீசர் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், தலைமறைவான ஜோசப்பை வலை வீசித் தேடி வருகின்றனர். காரைக்காலில் மையப்பகுதியில் முன் விரோதம் காரணமாக வீடு கொளுத்திய சம்பவத்தில் அடுத்தடுத்து வீடுகள் எரிந்து சாம்பலான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.